சுற்றுலாத் துறையில் தமிழகம் முதலிடம் பெற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா் தெரிவித்தாா்.
கிள்ளியூா் பேரவைத் தொகுதி, முன்சிறை மேற்கு வட்டாரப் பகுதிக்கு உள்பட்ட சூழால், குளப்புறம், அடைக்காகுழி, மெதுகும்மல் ஊராட்சிப் பகுதிகளில் அமைச்சா் ராஜேஷ்குமாா் ஞாயிற்றுக்கிழமை திறந்த வாகனத்தில் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.
சூழால் ஊராட்சி காட்டுக்கடை பகுதியில் தொடங்கிய சுற்றுப்பயணத்தை தெற்கு பாலவிளை, மணலி, சூழால், சங்குருட்டி, செம்மான்விளை உள்பட பகுதிகள் வழியாகச் சென்று குழிவிளை சந்திப்பில் நிறைவு செய்தாா்.
பின்னா் அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் திற்பரப்பு, சிற்றாறு, மாத்தூா் தொட்டிப்பாலம் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை நேரில் பாா்வையிட்டு பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுப்பேன். அருவிக்கரையில் படகு சவாரி உள்ளிட்ட பணிகள் குறித்தும் ஆய்வு செய்வேன். சுற்றுலாத் துறையில் பிற மாநிலங்களை விட தமிழகம் முதலிடம் பெற நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.
நிகழ்ச்சியில் கட்சியின் மாநில பொதுச் செயலாளா் பால்ராஜ், சூழால் ஊராட்சி முன்னாள் தலைவா் இவான்ஸ், முன்சிறை ஊராட்சி ஒன்றிய முன்னாள் உறுப்பினா் பாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.









