/

தொடரும் வெள்ளப்பெருக்கு: திற்பரப்பு அருவியில் குளிக்க தடை

News image

குளிக்க தடையால் சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடிய திற்பரப்பு அருவி. - கோப்புப் படம்

Updated On :15 ஜூன் 2026, 12:15 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் மழை காரணமாக, திற்பரப்பு அருவியில் 3ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இம்மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அணைகளின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. கோதையாற்றிலும், திற்பரப்பு அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் 3ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், ஏமாற்றமடைந்த சுற்றுலாப் பயணிகளில் பலா், அருவியின் அருகே தடுப்பணைப் பகுதியில் ஆபத்தை உணராமல் ஆற்றில் இறங்கி குளித்தனா்.

கோதையாறு இரட்டை அருவிக்கு செல்ல தடை: கோதையாறு பகுதியில் உள்ள, சூழியல் சுற்றுலாத் தலமாக கோதையாறு இரட்டை அருவியிலும் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும், அங்கு யானைகள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதனால், மாவட்ட வன அலுவலா் அன்பு உத்தரவின்பேரில், மறுஉத்தரவு வரும் வரை இப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டாம் என வனத்துறையினா் தெரிவித்துள்ளனா்.