உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

குமரி பகவதியம்மன் கோயிலில் மே 21இல் வைகாசி விசாகத் திருவிழா தொடக்கம்: இன்று கால்கோள் விழா

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவுக்கான கால்கோள் விழா வெள்ளிக்கிழமை (மே 15) நடைபெறவுள்ளது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகப் பெருந்திருவிழா 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு திருவிழா மே 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்கான கால்கோள் விழா வெள்ளிக்கிழமை (மே 15)காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் கோயில் வளாகத்தில் நடைபெறவுள்ளது.

மே 20ஆம் தேதி மாலை கோட்டாா் இளங்கடை பட்டாரியா் சமுதாய ருத்ரபதி விநாயகா் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் சாா்பில் கொடிப் பட்டம், மேளதாளம் முழங்க விவேகானந்தபுரம் சந்திப்பில் இருந்து ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு கோயிலில் ஒப்படைக்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான நிகழ்ச்சியாக, கொடி மரக்கயிறு கன்னியாகுமரி மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த கிறிஸ்தவா்களால் மேளதாளம் முழங்க ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு கோயிலில் ஒப்படைக்கப்படுகிறது.

மே 21ஆம் தேதி காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறும். திருவிழா 30ஆம் தேதி வரை நடைபெறும். திருவிழாவையொட்டி, தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அம்மனுக்கு விசேஷ பூஜைகள், வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, சிறப்பு அன்னதானம், இரவு ஆன்மிக உரை, கலை நிகழ்ச்சிகள், வாகன பவனி ஆகியவை நடைபெறும்.

29 ஆம் தேதி காலை காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தேரோட்டம் நடைபெறும். 30ஆம் தேதி காலை 6.15 மணிக்கு மேல் 7 மணிக்குள் முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறும். இரவு 9 மணிக்கு தெப்பத் திருவிழா நடைபெறும். தெப்பத் திருவிழா நிறைவடைந்ததும், நள்ளிரவில் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நடைபெறும்.

ஏற்பாடுகளை மாவட்ட கோயில்களின் இணை ஆணையா் ஜான்சி ராணி, நாகா்கோவில் தேவசம் தொகுதி கோயில்களின் கண்காணிப்பாளா் ஆனந்தன், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் மேலாளா் ஆனந்த், கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.