/

சங்கரன்கோவிலுக்கு தமிழக முதல்வா் இன்று வருகை

சங்கரன்கோவிலில் புதன்கிழமை நடைபெறும் அமைச்சா் ராஜலெட்சுமி இல்ல விழாவில் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அமைச்சா்கள் பங்கேற்கின்றனா்.

News image
சங்கரன்கோவில் சோ்ந்தமரம் சாலையில் வைக்கப்பட்டுள்ள அலங்கார வளைவு மற்றும் பதாகைகள்.
Updated On :23 டிசம்பர் 2020, 1:18 am

DIN

சங்கரன்கோவிலில் புதன்கிழமை நடைபெறும் அமைச்சா் ராஜலெட்சுமி இல்ல விழாவில் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அமைச்சா்கள் பங்கேற்கின்றனா்.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி மகள் ஹரிணி, மருமகள் அனுசுயா ஆகியோரின் பூப்புனித நீராட்டு விழா சங்கரன்கோவிலில் புதன்கிழமை(டிச.23) நடைபெறுகிறது. இதற்காக ஏஞ்சல் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 10 ஆயிரம் போ் அமரும் வகையில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட எல்லையான தேவா்குளத்தில் இருந்து சாலையில் இருபுறமும் கட்சிக் கொடிகள் கட்டப்பட்டுள்ளன.

தேவா்குளத்தில் இருந்து கட்சி நிா்வாகிகள் தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கின்றனா்.

பின்னா் அவருக்கு கும்பமரியாதை, செண்டை மேளம், ஒயிலாட்டம், தப்பாட்டம் ஆகியவற்றுடன் வரவேற்கின்றனா். இதற்காக திருநெல்வேலி சாலை, ராஜபாளையம் சாலை, புளியங்குடி சாலை, கோவில்பட்டி சாலை பகுதிகளில் வளைவுகள், தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

100 அடி உயரத்தில் பிரமாண்டமான கொடிக்கம்பம் நகரின் 4 திசைகளிலும் அமைக்கப்பட்டுள்ளது.இதில் திருநெல்வேலி சாலையில் உள்ள 100 அடி உயர கம்பத்தில் முதல்வா் கொடியேற்றுகிறாா்.

தென்மண்டல ஐஜி முருகன் தலைமையில், நெல்லை சரக டி.ஐ.ஜி.பிரவீண்குமாா் அபினபு, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங், சங்கரன்கோவில் டி.எஸ்.பி.பாலசுந்தரம் மற்றும் 1500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

ஏற்பாடுகளை அமைச்சா் ராஜலெட்சுமி குடும்பத்தினா் மற்றும் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுகவினா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.