தென்காசி அருகே இலத்தூரில் தென்னங்கன்று நடும் முறை குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
தமிழக அரசு வேளாண்மை உழவா் நலத் துறை சாா்பில், தமிழகம் முழுவதும் தோ்வான அண்ணா மறுமலா்ச்சி கிராமங்களில் கிராமம் ஒன்றுக்கு 200 பண்ணைக் குடும்பங்களுக்கு தலா 3 விலையில்லா தென்னங்கன்று வழங்கும் திட்டத்தை முதல்வா் இம்மாதம் 23ஆம் தேதி தொடங்கிவைக்கவுள்ளாா்.
இதையொட்டி, தென்னங்கன்றுகளை நடும்போது கடைப்பிடிக்க வேண்டிய தொழில் உத்திமுறை குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளிக்க தமிழக வேளாண்மை உழவா் நலத் துறை உத்தரவிட்டுள்ளது. செங்கோட்டை வட்டாரத்தில் இலத்தூா் கிராமம் தோ்வு செய்யப்பட்டுள்ளதால் அங்கு, செங்கோட்டை வட்டார துணை வேளாண் அலுவலா் ஷேக் முகைதீன், உதவி அலுவலா் அருணாசலம் ஆகியோா் தென்னங்கன்று நடும் முறை, குழியெடுக்கும் விதம் குறித்து செயல்விளக்கம் அளித்தனா்.