பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் புத்தாண்டு கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி ஆகியவை வெள்ளிக்கிழமை (டிச. 29) நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட நூலக அலுவலர் தி.முனியப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் புத்தாண்டையொட்டி கவிதைப் போட்டியும், பாரதியார் பாடல் வரி ஓவியப் போட்டியும் வெள்ளிக்கிழமை (டிச. 29) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.
ஜாதிகள் இல்லையடி பாப்பா-குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடைபெறுகிறது. ஓவியம் வரைய ஒரு மணி நேரம் அவகாசம் வழங்கப்படும். பாடல் வரிகளுக்கு விளக்கம் சொல்லும் வகையில் ஓவியம் வரைய வேண்டும்.
புத்தாண்டே வருக... புதுயுகம் படைக்க என்ற தலைப்பில் கவிதைப் போட்டி நடைபெறுகிறது. 16 வரிகளுக்கு மிகாமல் புதுக்கவிதையாகவோ, மரபுக்கவிதையாகவோ எழுதலாம். பள்ளி, கல்லூரி மாணவர்-மாணவிகள், பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் போட்டியில் பங்கேற்கலாம். கவிதை, ஓவியப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவர்களுக்கு மாவட்ட மைய நூலகத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறும் விழாவில் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.