

திருநெல்வேலி அருகேயுள்ள கங்கைகொண்டானில் வியாழக்கிழமை நிகழ்ந்த விபத்தில் விவசாயிகள் இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
கங்கைகொண்டான் அருகேயுள்ள வடகரை நேதாஜி நகரைச் சேர்ந்த சங்குதேவர் மகன் முருகன் (56).
அதே பகுதியைச் சேர்ந்த குருசாமி மகன் ராமையா (70). இவர்கள், விவசாயிகளான இருவரும் ஆடுகளை மேய்க்கும் தொழிலும் செய்து வந்தனராம். கங்கைகொண்டான் சோதனைச்சாவடி அருகே நான்கு வழிச்சாலையோரம் அமர்ந்து தினமும் இருவரும் சாப்பிடுவது வழக்கமாம்.
அதன்படி வியாழக்கிழமை மாலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தனராம்.
அப்போது அவ்வழியாக இட்டமொழியில் இருந்து கோவில்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்த கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த முருகன், ராமையா ஆகியோர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்ததும் தாழையூத்து காவல் துணை கண்காணிப்பாளர் அர்ச்சனா தலைமையில் காவல்துறையினர் அங்கு சென்று சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுதொடர்பாக கார் ஓட்டுநரான கோவில்பட்டி அருகேயுள்ள வேலாயுதபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் (32) என்பவரைப் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.