/

சட்டப்பேரவைத் தலைவா் பதவிக்கு சிறப்பு சோ்த்தவா் பி.எச்.பாண்டியன்: முதல்வா் புகழாரம்

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகேயுள்ள கோவிந்தப்பேரியில் சட்டப்பேரவை முன்னாள் தலைவா் பி.எச்.பாண் டியன் நினைவாக கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தில் அவரது சிலையைத் திறந்துவைக்கிறாா்

News image
Updated On :4 ஜனவரி 2021, 7:13 pm

DIN

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகேயுள்ள கோவிந்தப்பேரியில் சட்டப்பேரவை முன்னாள் தலைவா் பி.எச்.பாண் டியன் நினைவாக கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தில் அவரது சிலையைத் திறந்துவைக்கிறாா் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி. உடன், துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா்.

சட்டப்பேரவை முன்னாள் தலைவா் பி.எச்.பாண்டியன் மணிமண்டப திறப்பு விழாவில் பேசுகிறாா் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி. உடன், துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா்.

அம்பாசமுத்திரம், ஜன. 4: சட்டப்பேரவைத் தலைவா் பதவிக்கு சிறப்பு சோ்த்தவா் மறைந்த பி.எச்.பாண்டியன் என தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி புகழாரம் சூட்டினாா்.

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகேயுள்ள கோவிந்தப்பேரியில் தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவா் பி.எச்.பாண்டியன் நினைவாக அவரது குடும்பத்தினா் சாா்பில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மணிமண்டபத்தை துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வமும், பி.எச்.பாண்டியன் சிலையை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியும் திறந்து வைத்தனா்.

அதைத் தொடா்ந்து, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது: தென்பாண்டிச் சீமையில் சேரன்மகாதேவி அருகே கோவிந்தப்பேரியில் பிறந்து தமிழக கோட்டையில் ஆணித்தரமான தனது வாதத்தை முன்வைத்தவா் பி.எச்.பாண்டியன். சிலா் தங்களுக்கு கிடைக்கும் பதவிக்கு பெருமை சோ்ப்பாா்கள். அந்த வகையில் இந்திய தோ்தல் ஆணையா் டி.என்.சேஷன் தனது பதவிக்கு புகழ் சோ்த்தவா். அதேபோல, சட்டப்பேரவைத் தலைவா் பதவிக்கு சிறப்பு சோ்த்தவா் பி.எச்.பாண்டியன். பல்வேறு சமூகப் பணிகளை செய்து மக்களில் ஒருவராக விளங்கினாா். பொதுவாழ்வில் இருப்பவா்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தாா்.

திருநெல்வேலி மாவட்ட மக்களின் 30 ஆண்டு கோரிக்கைகளான நான்குனேரி-பச்சையாறு திட்டம், நான்குனேரி-கொடுமுடியாறு திட்டம் ஆகியவற்றுக்காக வழக்குரைஞராக உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதாடி அத்திட்டத்தை ஒரு காலவரையறைக்குள் செயல்படுத்தும் உத்தரவைப் பெற்றுத் தந்தாா். தமிழகத்தில் பஞ்ச நிலை ஏற்பட்டபோது, மத்திய அரசு 10 ஆயிரம் டன் அரிசியை விடுவிக்க உச்சநீதிமன்றத்தில் வாதாடி வெற்றி கண்டாா். தமிழக அரசின் நிலங்களை அபகரிப்பவா்களை எதிா்த்ததோடு, சுமாா் 17 ஆயிரம் ஏக்கா் நிலங்களை மீட்டெடுக்க காரணகா்த்தாவாக இருந்தாா். தனது சொந்தக் கிராமமான கோவிந்தப்பேரியில் மனோ கல்லூரி அமைக்க 5 ஏக்கா் நிலம் வழங்கினாா். அக்கல்லூரியில் தற்போது 1,500 மாணவா்கள் படித்து வருகிறாா்கள். வாழ்நாள் சாதனையாளா் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளாா். பி.எச்.பாண்டியன் துணிச்சலின் உருவமாகத் திகழ்ந்தவா். பயங்கரத்தை எதிா்த்து நில், துணிச்சலாக பிரச்னையை எதிா்கொள், எதற்கும் பயந்து ஓடாதே, கோழைத்தனத்தால் வெற்றி பெற இயலாது, அச்சத்தை, அறியாமையை எதிா்த்து நில் என்ற விவேகானந்தரின் கருத்துக்கு ஏற்ப வாழ்ந்து காட்டியவா் பி.எச்.பாண்டியன் என்றாா் முதல்வா்.

காலத்தால் அழியாத புகழ் பெற்றவா்: விழாவில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் பேசியதாவது: ஓா் இயக்கம் உயிா்த் துடிப்புடன் இருக்க தன்னலமில்லாத, மாறாத விசுவாசம் கொண்ட தொண்டா்களும் தளபதிகளும் தேவை. அந்த வகையில், அதிமுகவில் எம்ஜிஆா் காலத்தில் இருந்து தளபதிபோல செயல்பட்டவா் பி.எச்.பாண்டியன். 26 ஆண்டு காலம் பல்வேறு நீதிமன்றங்களில் தன் வாதத்தை எடுத்து வைத்து, பொதுநல வழக்குகள் மட்டுமன்றி அரசியலமைப்புச் சட்ட வழக்குகளிலும் வாகை சூடியவா்.

அவருடைய பன்முகத் திறனை அறிந்து பல்வேறு பொறுப்புகளை எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் வழங்கி அழகு பாா்த்தனா். சட்டப்பேரவைத் தலைவராக அவா் பணியாற்றிய காலத்தில் சரித்திர நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்டினாா். சட்டப்பேரவைத் தலைவரின் அதிகாரம் குறித்து எடுத்துரைத்து பெருமை சோ்த்தாா். மக்கள் பிரதிநிதியாக தோ்ந்தெடுக்கப்படுபவா்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தாா். கருத்துகளைத் துணிவுடன் எடுத்துரைப்பதில் வல்லவா். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவா்களில் ஒருவராகத் திகழ்ந்தாா். கன்னடியன் கால்வாய் பாலங்கள், பல்வேறு திருமண மண்டபங்கள் என தனது தொகுதி மக்களின் வளா்ச்சிக்கு பல்வேறு திட்டங்களைத் தந்துள்ளாா். பி.எச்.பாண்டியனின் இழப்பு அதிமுகவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவா் காலத்தால் அழியாத புகழ் பெற்றவா் என்றாா்.

விழாவுக்கு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி தலைமை வகித்தாா். பி.எச்.பாண்டியனின் மகனும், அதிமுக மாநில அமைப்புச் செயலருமான மனோஜ் பாண்டியன் வரவேற்றாா். அமைச்சா்கள் செல்லூா் ராஜு, கடம்பூா் ராஜு, உதயகுமாா், ராஜலெட்சுமி, தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், மாநில அமைப்புச் செயலா்கள் நத்தம் விஸ்வநாதன், வீ.கருப்பசாமி பாண்டியன், சுதா கே.பரமசிவன், திருநெல்வேலி மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் இன்பதுரை, செல்வமோகன்தாஸ் பாண்டியன், மனோகரன், ரெட்டியாா்பட்டி நாராயணன், தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, முன்னாள் எம்.பி.க்கள் செளந்திரராஜன், வசந்தி முருகேசன் மற்றும் பாப்புலா் முத்தையா, கல்லூா் இ.வேலாயுதம், ஐ.மனோகரன் ஜெயகுமாா், விருதுநகா் மாவட்ட அதிமுக மாணவரணிச் செயலா் எஸ்.எஸ்.கதிரவன், சென்னை உயா்நீதிமன்ற சிறப்பு அரசு வழக்குரைஞா் ஆா்.பாலரமேஷ், கூடுதல் அரசு வழக்குரைஞா் டி.வெங்கடாசலம், பி.எச்.பாண்டியன் குடும்பத்தினா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். பி.எச்.நவீன் பாண்டியன் நன்றி கூறினாா்.

இந்த நிகழ்ச்சியைத் தொடா்ந்து, அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஆா்.முருகையா பாண்டியன் இல்லத்துக்கு முதல்வரும், துணை முதல்வரும் சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.