/

கல்லிடைக்குறிச்சி அருகே அனுமதியின்றி மணல் குவாரி: முதன்மைக் குற்றவாளி கைது

கல்லிடைக்குறிச்சி அருகே செயற்கை மணல் தயாரிப்பு என்ற பெயரில் ஓடை மணலை விற்பனை செய்த வழக்கில் முதன்மைக் குற்றவாளியை போலீஸார் கைது செய்தனர்.

News image

போலீஸார் கைது செய்த செய்யது சமீர்.

Updated On :24 ஜனவரி 2021, 12:51 pm

DIN

கல்லிடைக்குறிச்சி அருகே செயற்கை மணல் தயாரிப்பு என்ற பெயரில் ஓடை மணலை விற்பனை செய்த வழக்கில் முதன்மைக் குற்றவாளியை போலீஸார் கைது செய்தனர்.
 
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம் தெற்குக் கல்லிடைக்குறிச்சி பகுதியில் கேரளாவைச் சேர்ந்த மனுவேல் ஜார்ஜ் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் பூமி எம் சாண்ட் என்ற பெயரில் தனியார் செயற்கை மணல் குவாரி செயல்பட்டு வந்தது. இங்கு ஓராண்டுக்கும் மேலாக செயற்கை மணல் தயாரிப்பிற்குப் பதிலாக முறைகேடாக குவாரிக்கு அருகில் உள்ள வண்டல் ஒடை ஆற்று மணலை எடுத்து விற்று வந்துள்ளனர்.  இதுகுறித்து சிவசங்கரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்ததையடுத்து அம்பாசமுத்திரம் மண்டல துணை வட்டாட்சியர் மாரிச்செல்வம் அந்தப் பகுதியில் ஆய்வு செய்து முறைகேடு நடந்திருப்பதை உறுதி செய்தார்.

இதையடுத்து அவர் கல்லிடைக்குரிச்சி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் பல கோடி அளவில் ஓடை மணலை முறைகேடாக விற்பனை செய்தது தெரியவந்ததையடுத்து சேரன்மகாதேவி சார் ஆட்சியர் பிரதீக் தயாள் நேரடியாக விசாரணையில் ஈடுபட்டார். விசாரணையில் பல கோடி ரூபாய் முறைகேடாக மணல் விற்கப்பட்டது உறுதியானதால் செயற்கை மணல் தயாரிப்பு நிறுவனத்திற்கு 9.5 கோடி ரூபாய் அபராதம் விதித்தார். மேலும் இந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டு 8 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். 

Story image

தொடர்ந்து செயற்கை மணல் முறைகேட்டில் ஈடுபட்ட முதன்மைக் குற்றவாளியான திருநெல்வேலி பாட்டப்பத்து பகுதியைச் சேர்ந்த செய்யது காதர் மகன் செய்யது சமீர் (37) என்பவரை அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரான்சிஸ் தலைமையில் கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் சகாய சாந்தி மற்றும் தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் தனிப்படை போலீஸார் சனிக்கிழமை சென்னையில் செய்யது சமீரை கைது செய்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை அவர் அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.