திருநெல்வேலி: நெல்லையில் விபத்து ஏற்பட்டு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் ஸ்ட்ரக்ச்சருடன் வந்து பிளஸ் 2 பொதுத் தேர்வை பள்ளி மாணவன் எழுதினான்.
நெல்லை மாவட்டம் பேட்டை பகுதியை சேர்ந்த அசாருதீன் என்ற மாணவன், அதே பகுதியில் இயங்கிவரும் காமராஜ் நகர்மன்ற மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். தற்போது அவருக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் திடீரென மாணவன் அசாருதீன் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
அங்கு அவருக்கு வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் இன்று கணித தேர்வு நடைபெற்றது. எப்படியாவது தேர்வை எழுதிவிட வேண்டும் என்று ஆர்வமுடன் இருந்தான்.
இதையடுத்து மாணவனின் பெற்றோர்கள் மருத்துவரின் அனுமதியோடு அசாருதீனை ஆம்புலன்சில் தேர்வு நடைபெறும் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் ஸ்ட்ரக்ச்சரில் இருந்தபடி மாணவன் அசாரூதின் ஆசிரியர் உதவியோடு பொதுத் தேர்வை எழுதினார்.
இவ்விபத்தில் சிக்கிய போதும் தன் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்வு என்பதால் அசாரூதின் தேர்வில் கலந்து கொண்டது சக மாணவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தியது.