முழு ஊரடங்கு: நெல்லையில் சாலைகள் வெறிச்சோடின

கரோனோ தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டன புதிய பேருந்து நிலையம்.
திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டன புதிய பேருந்து நிலையம்.


கரோனோ தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் 2020 மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாகப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு, பின்னர் தளர்வுகள் அதிகரிக்கப்பட்டன. அதன்பின்னர் இரண்டாவது அலையால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 

பல்வேறு மாவட்டங்களிலும் ஒரு இலக்கத்திற்கு நோய் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில், கரோனா பரவலின் வேகம் மீண்டும் அதிகரித்துள்ளது. 
மேலும், ஒமைக்ரான் அறிகுறியுடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி கடந்த 6 ஆம் தேதி முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. உழவர் சந்தை மற்றும் காய்கறி சந்தைகள் மைதானங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டன. பால், மருந்துக்  கடைகள் மட்டுமே இயங்குகின்றன. இதர கடைகள் 100 சதவிகிதம் அடைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம், சந்திப்பு பேருந்து நிலையம், நகரம் ரத வீதிகள், திருநெல்வேலி சந்திப்பு, பாளையங்கோட்டை தெற்கு கடைவீதி, மேலப்பாளையம், தச்சநல்லூர் உள்பட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள் ஆள்கள் நடமாட்டமின்றி காணப்பட்டன.

தற்காலிக காய்கனி சந்தைகள், மொத்த காய்கனி சந்தைகளும் திறக்கப்படவில்லை. சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை, திருநெல்வேலி-திருவனந்தபுரம் சாலை, திருநெல்வேலி-சங்கரன்கோவில் சாலை, திருநெல்வேலி-தூத்துக்குடி சாலை உள்ளிட்டவை வெறிச்சோடி காணப்பட்டன. இருசக்கர வாகனங்களில் செல்வோர் மருந்துகள் வாங்க மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

முழு ஊரடங்கையொட்டி திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர்கள் சுரேஷ்குமார் (மேற்கு), டி.பி. சுரேஷ்குமார் ( கிழக்கு) தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்து வெளியில் சுற்றித்திரிவோர் கண்காணிக்கப்படுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com