நெல்லை: நெல்லையில் கோயில் கொடை விழாவிற்கு சென்ற உறவினர் வீட்டிலையே 46 சவரன் நகைகளை கொள்ளையடித்த அதிமுக பெண் பிரமுகர் மற்றும் நகைகளை அடகு வைக்க உதவியாக இருந்த அதிமுக அம்மா பேரவை மாவட்ட துணை செயலாளர் அதிரடி கைது செய்யப்பட்டனர்.
நெல்லை பாளையங்கோட்டை சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் திவ்யா யாதவ். இவர் கீழ நத்தத்தில் உள்ள தனது உறவினர் நம்பி என்பவரது வீட்டிற்கு கோயில் கொடை விழாவிற்காக சென்றுள்ளார். அப்போது நம்பி வீட்டின் பீரோவில் இருந்த சுமார் 46 சவரன் நகைகளை திருடிச் சென்றுள்ளார்.
இதையும் படிக்க: அக்னிபத்: உச்ச நீதிமன்றத்தில் மனு
இதற்கிடையில் வீட்டில் இருந்த நகைகளை காணவில்லை என நம்பி தொல்காப்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் விசாரணையில் சம்பவத்தன்று திவ்யா யாதவ் அங்கு சென்றதன் அடிப்படையில் அவரிடம் விசாரித்துள்ளனர். அதில் நம்பி வீட்டில் இருந்த நகைகளை திருடியதை திவ்யா யாதவ் ஒப்புக் கொண்டுள்ளார்.
மேலும் திருடிய நகைகளை நெல்லை மாவட்ட அதிமுக அம்மா பேரவை துணை செயலாளர் பாண்டியராஜன் மூலம் வங்கியில் அடகு வைத்துள்ளார். இதையடுத்து தாலுகா காவல்துறையினர் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து இருவரையும் இன்று கைது செய்தனர். மேலும் வங்கியில் உள்ள நகைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கைதான திவ்யா யாதவ் ஆரம்பத்தில் அதிமுகவில் இருந்துள்ளார். பின்னர் கடந்த 2016-ல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்த அவர் 2018 வரை அமமுகவில் இளைஞர் பாசறை செயலாளர் பதவி வகித்துள்ளார்.
பின்னர் அமமுகவில் இருந்து விலகி தற்போது தற்போது அதிமுக கட்சியில் இருந்து வருகிறார். திருட்டு வழக்கில் அதிமுகவை சேர்ந்த பெண் பிரமுகர் மற்றும் அம்மா பேரவை மாவட்ட துணை செயலாளர் இருவரும் கூட்டாக கைதான சம்பவம் நெல்லை மாவட்ட அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.