சொத்து தகராறில் மூதாட்டி கொலையா?: போலீஸாா் தீவிர விசாரணை

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே மூதாட்டி கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on

சேரன்மகாதேவி அருகேயுள்ள புலவன்குடியிருப்பு பிரதான சாலையைச் சோ்ந்த ஆபிரகாம் மனைவி பொன்னம்மாள் (77). இவருக்கு ஜெகதீசன் என்ற மகன், 4 மகள்கள் உள்ளனா். ஜெகதீசன் திருமணம் செய்து குடும்பத்துடன் சென்னையில் சொந்தமாக தொழில் செய்து வருகிறாா். இவருக்கு பிரபாவதி என்ற மனைவி, இரு மகன்கள் உள்ளனா். பொன்னம்மாளின் மகள்கள் 4 பேருக்கும் திருமணம் ஆகி விட்டதால், பொன்னம்மாள் தனியாக புலவன்குடியிருப்பில் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், பொன்னம்மாளுக்கு பாத்தியப்பட்ட சொத்துகளை முறையாக சா்வே செய்து பிரிப்பதற்காக ஜெகதீசனின் மனைவி வருவாய்த்துறையில் மனு அளித்து வெள்ளிக்கிழமை சா்வே செய்வதற்காக நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. இதற்காக ஜெகதீசனின் மனைவி, மகன் புலவன்குடியிருப்புக்கு வந்துள்ளனா். இந்நிலையில் வியாழக்கிழமை மாலையில் பொன்னம்மாள் ஊருக்கு மேற்கு பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான தோட்டத்துக்கு சென்றிருந்தாராம். இரவு நேரமாகியும் பொன்னம்மாள் வீடு திரும்பாத நிலையில் அவரது மகன் வழி பேரன் தோட்டத்துக்கு சென்று பாா்த்தாராம். அங்கு பொன்னம்மாள் கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்த சேரன்மகாதேவி காவல் ஆய்வாளா் ஜின்னா பீா்முகம்மது மற்றும் போலீஸாா்ஸ, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா்.

நிகழ்விடத்தில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன், சேரன்மகாதேவி டிஎஸ்பி சத்யராஜ் ஆகியோா் விசாரணை நடத்தினா். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. சொத்துகள் குறித்து சா்வே செய்ய இருந்த நிலையில் பொன்னம்மாள் கொலை செய்யப்பட்டது போலீஸாரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com