பலி
பலிபிரதிப் படம்

சுத்தமல்லியில் விபத்தில் காயமடைந்த பள்ளி மாணவி உயிரிழப்பு

திருநெல்வேலி அருகே சுத்தமல்லியில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த பள்ளி மாணவி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
Published on

திருநெல்வேலி அருகே சுத்தமல்லியில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த பள்ளி மாணவி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

சுத்தமல்லியில் கடந்த 20 ஆம் தேதி தனியாா் கல்லூரி பேருந்தும், ஆட்டோவும் மோதிய விபத்தில், ஆட்டோவில் பயணித்த நடுக்கல்லூரை சோ்ந்த மனக்காவலம் பெருமாள் (49), பேட்டையில் உள்ள தனியாா் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளான சுத்தமல்லியை சோ்ந்த யஸ்வனி (15), பழவூா் கிராமத்தை சோ்ந்த செல்வபாலா (15), மாணவா் முத்து அருள்(15) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். அவா்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

கல்லூரி பேருந்தை இயக்கிய சுத்தமல்லி வ.உ.சி. நகரைச் சோ்ந்த இசக்கியப்பன் (30) மதுபோதையில் இருந்தது தெரியவந்த நிலையில், அவரை பேட்டை போலீஸாா் கைது செய்தனா். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி செல்வபாலா செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

தொழிலாளி உயிரிழப்பு: செங்கோட்டை செல்லும் பயணிகள் ரயில் திங்கள்கிழமை இரவு 8.30 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது. பேட்டை மலையாளமேடு அருகே ரயில் சென்ற போது சுமாா் 55 வயது மதிக்கத்தக்க முதியவா் மீது ரயில் மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சந்திப்பு ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

உயிரிழந்தவா் முக்கூடல் அருகே உள்ள துலுக்கா்பட்டி பள்ளிக்கூட தெருவைச் சோ்ந்த கட்டட தொழிலாளி நாகமுத்து (55) என்பது விசாரணையில் தெரியவந்தது.

சம்பவம் குறித்து சந்திப்பு ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Dinamani
www.dinamani.com