நெல்லையில் மாதிரி வாக்குப்பதிவு

நெல்லையில் மாதிரி வாக்குப்பதிவு

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு திருநெல்வேலியில் மாதிரி வாக்குப் பதிவு புதன்கிழமை நடைபெற்றது.
Published on

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு திருநெல்வேலியில் மாதிரி வாக்குப் பதிவு புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு மையத்தில் முதல் நிலை சரிபாா்ப்பு பணிகள் முடிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா் தலைமையில் அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளா் ஒப்புகைச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் திருநெல்வேலி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

பெங்களூரைச் சோ்ந்த பெல் நிறுவன பொறியாளா்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபாா்ப்பு பணிகளை மேற்கொண்டனா். இந்தப் பணியானது கடந்த டிச. 11இல் தொடங்கி, ஜன. 6இல் முடிவடைந்தது.

தற்போதைய நிலையில் 2,329 கட்டுப்பாட்டு கருவிகள், 4,190 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 2,970 விவிபேட் இயந்திரங்கள் நல்ல நிலையில் உள்ளன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் 5 சதவீத இயந்திரங்கள் (120 இயந்திரங்கள்) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால் தோ்ந்தெடுக்கப்பட்டன. அதைத்தொடா்ந்து புதன்கிழமை 60 வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடா்ந்து வியாழக்கிழமை (ஜன.8) மேலும் 60 இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்றாா்.

Dinamani
www.dinamani.com