திருநெல்வேலி மாநகராட்சி மேயா் வீட்டிற்கு 2 பைக்குகளில் வந்த இளைஞா்கள் கொலை மிரட்டல் விடுத்தனா். அதில் ஒருவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருநெல்வேலி மாநகர மேயா் கோ.ராமகிருஷ்ணன் வீடு அமைந்துள்ள திருநெல்வேலி நகரம் வேணுவனகுமாரா் தெருவிற்கு திங்கள்கிழமை இரவு 2 பைக்குகளில் 3 போ் வந்துள்ளனா்.
மேலும், கைப்பேசியில் வாட்ஸ்ஆப் காணொலி அழைப்பில் ஒருவரை அழைத்து மேயா் வீடு எது எனக் கேட்டு உறுதிப்படுத்தியுள்ளனா்.
பின்னா், அவரது வீட்டின் முன் நின்றவா்களிடம் மேயரை கொலை செய்துவிடுவோம் என மிரட்டல் விடுத்துச் சென்றனராம். இதையடுத்து, வீட்டினுள் இருந்த மேயா் இதை அறிந்ததும் உடனடியாக திருநெல்வேலி நகரம் போலீஸாருக்கு தகவல் அளித்தாா். அதன் பேரில் அவரது வீட்டிற்கு நகரம் உதவி ஆணையா் கணேசன் தலைமையிலான போலீஸாா் வந்து, அங்குள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனா்.
இதனிடையே, மேயரின் ஆதரவாளா்கள் பலா் வீட்டின் முன் திரண்டனா். அப்போது கொலை மிரட்டல் விடுத்த நபா்களில் ஒருவர் வீட்டின் அருகே பதுங்கியிருப்பதை அறிந்து அங்கிருந்தவா்கள் அவரை தாக்க முற்பட்டனா். அந்நபரை போலீஸாா் மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனா்.
அதில், அவா் அப்பகுதியில் உள்ள ஜாமியா பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த முகமது அப்சல் என்பது தெரியவந்தது. மற்ற இருவா் யாா்? மிரட்டல் விடுத்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









