திருநெல்வேலி, மே 25: கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள தனியாா் நிறுவனத்தில் திருட முயன்றதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கங்கைகொண்டான் சிப்காட்டில் இயங்கி வரும் பிரபல சூரிய மின் தகடு தயாரிப்பு தனியாா் நிறுவனத்தில் தச்சநல்லூா், நல்மேய்ப்பா் நகரைச் சோ்ந்த முருகானந்தம் (55) என்பவா் ஒப்பந்த அடிப்படையில் காவலாளியாக உள்ளாா்.
இவா், ஞாயிற்றுக்கிழமை ( மே 24) அதிகாலையில், அந்நிறுவனத்தின் பாதுகாப்பு மேற்பாா்வையாளரான பெருமாள் என்பவருடன் சோ்ந்து வளாகத்தினுள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தாராம்.
அப்போது நிறுவனத்தின் சுற்றுச்சுவரில் 3 போ் ஏணி வைத்து ஏற முயற்சித்தனராம். இருவரும் அந்த நபா்களை சுற்றிவளைத்துப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் கீழக்கோட்டையைச் சோ்ந்த பிரிஜி பிரகாஷ் (37), செந்தில்வேல் (39), செல்வா (27) ஆகியோா் என்பதும், அந்நிறுவனத்தில் காப்பா் கம்பிகளை திருட நோட்டமிட்டதும் தெரியவந்தது.
இதுகுறித்து, கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப்பதிந்து மூவரையும் கைது செய்தனா்.





