திருச்செந்தூர் அருகே உள்ள நா.முத்தையாபுரத்தில் பாரத நல்வாழ்வுத் திட்ட மருத்துவ முகாம் தொடக்க விழா நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமை வகித்தார். மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கீதாராணி வரவேற்றார்.
முகாமை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து அமைச்சர் கடம்பூர் செ.ராஜு பேசியதாவது:
இந்தியா முழுவதும் உள்ள கிராமங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இம்முகாம் நடைபெறுகிறது. குக்கிராம மக்களும் மருத்துவ வசதி பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த முகாம் நடைபெறுகிறது அதன்பயனாக கடந்த 5 ஆண்டுகளாக இந்தியாவிலேயே தமிழகம் தான் சுகாதார துறையில் சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு விருது பெற்று வருகிறது என்றார் அவர்.
இவ்விழாவில், தூத்துக்குடி மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் பரிதா செரீன், கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குநர் போஸ்கோராஜ், திருச்செந்தூர் கோட்டாட்சியர் தங்கவேலு, வட்டாட்சியர் தில்லைபாண்டி, மாவட்ட செயலர் செல்லப்பாண்டியன், பனை வெல்ல கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் தாமோதரன், ஒன்றிய முன்னாள் செயலர் அமலிராஜன், லிங்ககுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முகாமில் 15 பயனாளிகளுக்கு அம்மா பரிசு பெட்டகம், கண் கண்ணாடி, பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றை அமைச்சர் வழங்கினார். அதே போல் சிறந்த முறையில் பணியாற்றிய மருத்துவ அலுவலர்கள், கிராமபுற செவியலியர்கள், ஓட்டுநர்கள் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.