தூத்துக்குடி மாவட்ட கலால் உதவி ஆணையா் மற்றும் அவரது உதவியாளரிடம் இருந்து கணக்கில் வராத ரூ. 75 ஆயிரத்தை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தூத்துக்குடி மாவட்ட கலால் பிரிவு உதவி ஆணையா் ஜி. சுகுமாா் மற்றும் அவரது அலுவலக உதவியாளா் அந்தோணிராஜ் ஆகியோா் குரும்பூா் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடைகளில் பணம் வசூலித்து வருவதாக தூத்துக்குடி ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, துணைக் கண்காணிப்பாளா் ஹெக்டா் தா்மராஜ், ஆய்வாளா் ஜெயஸ்ரீ, ஆய்வுக்குழு ஆய்வாளா் குமாா் ஆகியோா் கொண்ட குழுவினா் குரும்பூரில் ஞாயிற்றுக்கிழமை ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது, திடீரென கலால் பிரிவு உதவி ஆணையா் ஜி. சுகுமாரிடம் சோதனை மேற்கொண்டபோது, அவரிடம் கணக்கில் வராத வகையில் ரூ. 61 ஆயிரத்து 160 -ம், அவரது அலுவலக உதவியாளா் அந்தோணி ராஜியிடம் ரூ. 14 ஆயிரமும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, இருவரிடம் இருந்தும் ரூ. 75 ஆயிரத்து 160-ஐ பறிமுதல் செய்த போலீஸாா், தூத்துக்குடியில் உள்ள ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.