கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயில் வருஷாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலுடன் இணைந்த சொர்ணமலை கதிரேசன் கோயிலில் வருஷாபிஷேக விழாவையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது.
தொடர்ந்து, கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு ஹோம பூஜை நடைபெற்றது. பின்னர், சொர்ணமலை கதிரேசனுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, யாகசாலை பூஜை நடைபெற்றது.
காலை 9.15 மணிக்கு யாகசாலையிலிருந்து தீர்தத குடங்கள் சிறப்புப் பூஜை செய்யப்பட்டு, திருக்கோயில் பிரகாரம் வலம் வந்து மூலவர் கதிர்வேல் முருகர், விநாயகர் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி விமானங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், கதிர்வேல் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
விழாவில், கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ, அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், தொழிலதிபர் கருப்பசாமி, மண்டகப்படிதாரர்கள் பி.எம்.வி. காளிராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் நாகராஜன் தலைமையில் அலுவலர்கள் செய்திருந்தனர்.