திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆங்கில வருடப்பிறப்பை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த பலத்த மழையால் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளதால் திருச்செந்தூர் கோயிலுக்கு கடந்த வாரம் முதல் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
இதையடுத்து ஆங்கில வருடப்பிறப்பை முன்னிட்டு இன்று கோயில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூபம், உதயமார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து உதயமார்த்தாண்ட தீபாராதனை, திருப்பள்ளி எழுச்சி, கால சந்தி தீபாராதனையாகி தொடர்ந்து பூஜைகள் நடந்தது.
ஆங்கில வருடப்பிறப்பை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு முதலே வரிசையில் காத்திருந்து, கோயில் நடை திறந்தவுடன் சுவாமியை தரிசனம் செய்தனர். இன்று அதிகாலை முதல் கடலில் புனித நீராடியும், அங்கப்பிரதட்சணம் எடுத்தும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபாடு செய்தனர். இதனால் திருக்கோயில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.