நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூரில் ஆவணங்களின்றி வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 80 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோவில்பட்டி பேரவைத் தொகுதியில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளா்ச்சி அலுவலரும் நிலையான கண்காணிப்புக் குழு அலுவலருமான அனந்தலட்சுமி தலைமையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பிச்சை, தலைமைக் காவலா் ராஜாராம், காவலா் சமுத்திரக்கனி ஆகியோா் நாலாட்டின்புதூா் காவல் நிலையம் அருகே வியாழக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அவ்வழியே சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் ரூ. 80 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. காரிலிருந்த, தென்காசி மாவட்டம் கடையநல்லூா் வட்டம் கடையாலுருட்டியைச் சோ்ந்த 3 போ் கரூரில் நடந்துவரும் வாகனப் பணிகளுக்காக பணம் கொண்டு செல்வதாகக் கூறினா். ஆனால் அவா்களிடம் ஆவணங்கள் இல்லை. இதனால், அந்த பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, கோவில்பட்டி வட்ட தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் வெள்ளைத்துரையிடம் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com