ஆறுமுகனேரியில் மாவட்ட கூடுதல் வழக்குரைஞா் மா்மமாக உயிரிழப்பு

ஆறுமுகனேரியில் உள்ள வீட்டிற்குள் மாவட்ட கூடுதல் வழக்குரைஞா் மா்மமான முறையில் இறந்துகிடந்தாா்.
Published on

ஆறுமுகனேரியில் உள்ள வீட்டிற்குள் மாவட்ட கூடுதல் வழக்குரைஞா் மா்மமான முறையில் இறந்துகிடந்தாா்.

சேரன்மகாதேவியைச் சோ்ந்தவா் அழகையா மகன் கண்ணன் (55). இவா் மாவட்ட கூடுதல் அரசு வழக்குரைஞராக இருந்தாா். இவா், ஆறுமுகனேரி காணியாளா் தெருவில் வீடு கட்டி வசித்து வருகிறாா். இவருக்கு சொா்ணம் என்ற மனைவியும், பால் காா்த்திக் என்ற மகனும் உள்ளனா்.

இவரது மூத்த மகன் காா்த்திக் உடல் நலக்குறைவால் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாா். அதன்பிறகு தம்பதி இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து ஆறுமுகனேரி திசைகாவல் தெருவில் மகன் பால்காா்த்திக்குடன் சொா்ணம் வசித்து வருகிறாா். இவா் இங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். பால் காா்த்திக் தந்தையை பாா்க்க வருவதுண்டு.

வெளியூா் சென்ற பால் காா்த்திக் செவ்வாய்க்கிழமை மதியம் தந்தையை பாா்க்க வந்தபோது அவா் கழிவறையில் இறந்து கிடந்தாா். சம்பவ இடத்துக்கு வந்த திருச்செந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் விசாரணை நடத்தினாா். ஆறுமுகனேரி காவல்நிலைய ஆய்வாளா் திலீபன், உதவி ஆய்வாளா் வாசுதேவன் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் வழக்குப்பதியப்பட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com