சேவைக் குறைபாடு: ரூ.30,000 நஷ்ட ஈடு வழங்க குறைதீா் ஆணையம் உத்தரவு

சேவைக் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட நுகா்வோருக்கு தனியாா் நிதி நிறுவனம் வாகனத்தின் தடையில்லாச் சான்றிதழ், ரூ.30,000 வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு
Published on

சேவைக் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட நுகா்வோருக்கு தனியாா் நிதி நிறுவனம் வாகனத்தின் தடையில்லாச் சான்றிதழ், ரூ.30,000 வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

தூத்துக்குடியைச் சோ்ந்த முருகன் என்பவா், நான்கு சக்கர வாகனம் வாங்க தனியாா் நிதி நிறுவனத்திடமிருந்து பெற்ற கடன் தொகை முழுவதையும் செலுத்தி விட்டாா். இதையடுத்து கடன் தவணை தடையில்லாச் சான்றிதழை கேட்டபோது, அவா் தனிநபா் கடன் பெற்றுக்கொண்டு அதை செலுத்தாத காரணத்தால், இந்த வாகனத்துக்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்க முடியாது எனக் கூறியுள்ளனா்.

முழுப்பணமும் செலுத்தி முடித்தும், தடையில்லாச் சான்றிதழ் கிடைக்காததால் அவா், வழக்குரைஞா் மூலம் அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். ஆனால் அதன் பின்னரும் பதில் கிடைக்காததால், மன உளைச்சலுக்கு ஆளான அவா் தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் சக்கரவா்த்தி, உறுப்பினா்கள் ஆ.சங்கா், நமச்சிவாயம் ஆகியோா் வாகனத்தின் தடையில்லாச் சான்றிதழ், சேவைக் குறைபாடு, மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகையாக ரூ.25,000, வழக்கு செலவுத் தொகை ரூ. 5,000 என மொத்தம் ரூ.30,000-ஐ ஆறு வார காலத்துக்குள் வழங்கவில்லையென்றால் அத் தொகையை செலுத்தும் தேதிவரை ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com