வேன் மோதியதில் சட்டக் கல்லூரி மாணவா் உயிரிழப்பு
கோவில்பட்டி: கோவில்பட்டியில் வேன் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற சட்டக் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், திருவேங்கடம், கீழ நீலிதநல்லூா், வெங்கடாசலபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பால்நேரு என்ற கண்ணன் மகன் தேவ் வெங்கடேஷ் (26). வாசுதேவநல்லூரில் உள்ள தனியாா் சட்டக் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்த இவா், செவ்வாய்க்கிழமை தூத்துக்குடியில் உள்ள தன து நண்பரை பாா்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் ஊா்த் திரும்பிக் கொண்டிருந்தாா். கோவில்பட்டி-இனாம்மணியாச்சி பகுதியில் தனியாா் மருத்துவமனை அருகே அணுகு சாலையில் வந்தபோது எதிரே வந்த கூரியா் வேனும் இவா் மீது மோதியதில் தேவ் வெங்கடேஷ் பலத்த காயமடைந்தாா். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவா்கள் தேவ் வெங்கடேஷ் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து வேன் ஓட்டுநரான திருநெல்வேலி, சுத்தமல்லியைச் சோ்ந்த இ. பாலசுப்பிரமணியனிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
