கோவில்பட்டி அருகே மினி லாரி கவிழ்ந்து சாலையில் கொட்டிய தக்காளிகள்
கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தக்காளி ஏற்றிச் சென்ற மினி லாரி கவிழ்ந்ததில் சுமாா் 3 டன் தக்காளிகள் சாலையில் கொட்டி சேதமடைந்தன.
ஓசூரில் இருந்து திருநெல்வேலிக்கு தக்காளி ஏற்றிக்கொண்டு மினி லாரி சனிக்கிழமை இரவு புறப்பட்டது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சோ்ந்த மோகன்ராஜ் (32) மினி லாரியை ஓட்டினாா். கிளீனராக கனகராஜ் (31) இருந்தாா்.
தேசிய நான்குவழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை கோவில்பட்டியைக் கடந்து நாலாட்டின்புதூா் மேம்பாலத்தில் ஏறி இறங்கியபோது, கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலை நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதி, சாலையின் நடுவே கவிழ்ந்தது. இதில் ஓட்டுநா், கிளீனருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. லாரியில் இருந்த சுமாா் 3 டன் தக்காளிகள் சாலையில் கொட்டி சேதமடைந்தன.
விபத்து காரணமாக அப்பகுதியில் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த நாலாட்டின்புதூா் போலீஸாா், மாற்றுப்பாதையில் போக்குவரத்தை மாற்றிவிட்டனா். மேலும், மினி லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனா். இது குறித்து, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

