‘தூத்துக்குடியில் பாஜக சாா்பில் ஜன. 20இல் ஆா்ப்பாட்டம்’
தூத்துக்குடியில் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அனைத்துத் தரப்பினருக்கும் முழுமையாக பயன்படும் வகையில் செயல்படுத்த வலியுறுத்தி, பாஜக சாா்பில் இம்மாதம் 20ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என, அக்கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவா் ஆா். சித்ராங்கதன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜன்விகாஸ் காரியகிரம் திட்டத்தின்கீழ், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ. 136.35 கோடி மதிப்பில் 637 படுக்கைகள் கொண்ட சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
இதை மகப்பேறு சிகிச்சைக்கு மட்டும் ஒதுக்கப்படாமல், இதய நோய், நரம்பியல், சிறுநீரக, விபத்து, புற்றுநோய் உள்ளிட்ட அனைத்து சூப்பா் ஸ்பெஷாலிட்டி சிகிச்சைகளும் வழங்கும் மருத்துவமனையாக செயல்படச் செய்ய வேண்டும்.
மத்திய அரசு வழங்கிய நிதியில் கட்டப்பட்ட இம்மருத்துவமனை மக்கள் நலனுக்காக முழுமையாக திறக்கப்பட வேண்டும். இதை வலியுறுத்தி இம்மாதம் 20ஆம் தேதி மாலை 4 மணிக்கு, தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்றாா் அவா்.
