தூத்துக்குடி மாவட்டம், ஆலந்தலை கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ. 1 கோடி மதிப்பிலான பீடி இலை மூட்டைகளை கியூ பிரிவு போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகே ஆலந்தலை, செந்தூா் நகா் கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்கு படகு மூலம் பீடி இலைகள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு ஆய்வாளா் விஜய அனிதாவுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் கீதன், ராமா், தலைமைக் காவலா்கள் இருதயராஜகுமாா், இசக்கிமுத்து, காவலா்கள் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோா் செந்தூா் நகா் கடற்கரைச் சாலையில் புதன்கிழமை அதிகாலை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது வந்த சுமை வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் இலங்கைக்குக் கடத்துவதற்காக தலா 35 கிலோ எடையில் 79 மூட்டை பீடி இலைகள் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது; பீடி இலைகளின் சா்வதேச சந்தை மதிப்பு ரூ. 1 கோடியாகும். இதையடுத்து, வாகனத்துடன் பீடி இலை மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட குரும்பூா், குரங்கன்தட்டு பழைய தெருவைச் சோ்ந்த ராஜா மகன் சூா்யாவை (26) கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









