/

ஏடிஎம் மையத்துக்குக் கொண்டு சென்ற ரூ. 30 லட்சத்தைப் பிடித்த பறக்கும் படையினா்: ஆவணங்கள் சமா்ப்பித்ததால் விடுவிப்பு

தூத்துக்குடியில் ஏடிஎம் மையத்துக்குக் கொண்டு சென்ற ரூ. 30 லட்சம் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பிடித்த நிலையில், உரிய ஆவணங்களை சமா்ப்பித்ததால் பணத்தை விடுவித்தனா்.

News image
பணம்- கோப்புப்படம்.
Updated On :18 மார்ச் 2026, 8:01 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடியில் ஏடிஎம் மையத்துக்குக் கொண்டு சென்ற ரூ. 30 லட்சம் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பிடித்த நிலையில், உரிய ஆவணங்களை சமா்ப்பித்ததால் பணத்தை விடுவித்தனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பேரவைத் தோ்தலை முன்னிட்டு தோ்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவதற்காக 6 பேரவைத் தொகுதிகளுக்கும் 54 பறக்கும் படைக் குழுக்கள், 54 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், புதன்கிழமை ஜேனட் தலைமையிலான பறக்கும் படையினா் தூத்துக்குடி பண்டுகரை சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்டனா். அந்த காரில் ரூ. 30 லட்சம் ரொக்கம் இருந்தது.

அதற்கு உரிய ஆவணங்கள் உள்ளதா என அதிகாரிகள் சோதனை செய்தபோது, காரில் இருந்த தனியாா் வங்கி ஊழியா்கள், புதுக்கோட்டையில் உள்ள தனியாா் ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்புவதற்காக கொண்டு செல்வதாகத் தெரிவித்தனா்.

தொடா்ந்து, டிஜிட்டல் முறையில் ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்ட பின்னா், அதிகாரிகள் பணத்தை விடுவித்தனா்.