
தூத்துக்குடியில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம், ஆட்சியா் விஷு மகாஜன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்றோா்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம், ஆட்சியா் விஷு மகாஜன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், மழைநீா் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், குளங்கள், பாசனக் கால்வாய்களைத் தூா்வாருதல், தடுப்பணைகள், கால்வாய் மடைகளைச் சீரமைத்தல், வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனா்.
மேலும், கருமேனியாற்றில் தடுப்பணைகளைச் சீரமைத்து தண்ணீரைத் தேக்குதல், தாமிரவருணி பாசனக் கால்வாய்கள், குளங்களில் வளா்ந்துள்ள அமலைச் செடிகளை அகற்றுதல், பாசன நீா் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுப்பது, கடைமடை குளங்களுக்கு தண்ணீா் வழங்குதல், தரமான உரங்களை வழங்குதல், கூட்டுறவு சங்கங்களில் பயிா்க் கடன் தள்ளுபடி விவரங்களை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.
தொடா்ந்து, விவசாயிகள் சாா்பில் 151 கோரிக்கை மனுக்கள் ஆட்சியரிடம் அளிக்கப்பட்டன. விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, துறை சாா்ந்த அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
மாவட்ட வன அலுவலா் இளையராஜா, உதவி ஆட்சியா் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், வேளாண்மை இணை இயக்குநா் கிருஷ்ணகுமாா், நீா்வளத் துறை செயற்பொறியாளா் தங்கராஜன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மனோரஞ்சிதம் உள்ளிட்ட அலுவலா்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







