கணினிக் கோளாறால் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் அவதி!

திருச்சி, டிச. 7: கணினிக் கோளாறால் பிஎஸ்என்எல் இணைப்புகளுக்குப் பணம் செலுத்தச் செல்லும் வாடிக்கையாளர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருச்சி தொலைத் தொடர்பு மாவட்டத்தின் (திருச்சி, கரூர், பெரம
Updated on
1 min read

திருச்சி, டிச. 7: கணினிக் கோளாறால் பிஎஸ்என்எல் இணைப்புகளுக்குப் பணம் செலுத்தச் செல்லும் வாடிக்கையாளர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

திருச்சி தொலைத் தொடர்பு மாவட்டத்தின் (திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை) முதன்மைப் பொது மேலாளர் அலுவலகத்தில் பணம் செலுத்துவதற்கென தனி வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில், 7 பொது கவுன்ட்டர்களும், பெரிய நிறுவனங்கள் மற்றும் பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கான ஒரு பிரத்யேக கவுன்ட்டரும் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 4 கவுன்ட்டர்களில் காசோலையும் செலுத்தலாம். இந்த கவுன்ட்டர்கள் அனைத்தும் தொடங்கப்பட்ட காலத்தில் செயல்பட்டதோடு சரி. தற்போது, ஏதேனும் இரண்டு கவுன்ட்டர்கள்தான் திறந்திருக்கின்றன. இவ்விரண்டிலும் நீண்ட வரிசை, எப்போதுமே.

அதிலும் குறிப்பாக, இந்த வாரத்தில் பல நேரங்களில் இந்த இரண்டு கவுன்ட்டர்களும் அவ்வப்போது மூடப்பட்டன. கணினி இணைப்பு கிடைக்கவில்லை என்று காரணம் தெரிவிக்கப்பட்டது.

வரிசையில் நின்றவர்கள் சிறிதுநேரம் எதிரே போடப்பட்டுள்ள நாற்காலிகளில் அமர்வதும், திரையரங்குகளைப் போல கவுன்ட்டர் திறக்கப்படும்போது வேகவேகமாக எழுந்து சென்று வரிசையைப் பிடித்துக் கொண்டு நிற்பதும் இந்த வாரத்தின் காட்சிகள்.

காரணம் என்ன?

தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களையும் சேர்த்து வாடிக்கையாளர் தகவல் தொகுப்பு (சிடிஆர்) அண்மையில் ஹைதராபாத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் இருந்து இணையதளத்தின்மூலம் இயக்கப்படும் முறையில்தான் எங்கிருந்தும், எந்த இணைப்புக்கும் பணம் செலுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், தற்போதுள்ள இணைப்புகளின் அதிகரிப்புக்கு ஏற்ப இணையதள சர்வரின் கொள்ளளவையும், திறனையும் அதிகரிக்கவில்லை என்று பிஎஸ்என்எல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால், வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் இடங்கள் மட்டுமல்ல, பிஎஸ்என்எல் அலுவலகங்களிலுள்ள கணக்குப் பிரிவு அலுவலர்களின் கணினியும் அவ்வப்போது உறக்கத்துக்குச் சென்றுவிடுகின்றன. திருச்சி தவிர்த்த மற்ற மாவட்டங்களில் இதுபோன்ற பிரச்னை அவ்வப்போது எழுவதுண்டு என்கின்றனர். கணினி பிரச்னை தவிர, பணம் எண்ணும் இயந்திரத்தையும், கள்ள நோட்டைக் கண்டுபிடிக்கும் இயந்திரத்தையும் அவ்வப்போது அருகிலுள்ள கவுன்ட்டர்களுக்கு சென்று கடன் வாங்கி வரும் நிலையும் காணப்படுகிறது.

இதுதொடர்பாக திருச்சி முதன்மைப் பொது மேலாளர் அலுவலகத்திலிருந்து ஹைதராபாத் அலுவலகத்திலுள்ள பொறியாளர்களுக்கு ஏராளமான இமெயில் அனுப்பியும் பிரச்னை தீர்ந்தபாடில்லை என்கின்றனர் அதிகாரிகள்.

தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாக தொழில் நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பிஎஸ்என்எல் நிறுவனம், காக்க வைக்கும் நிலையிலிருந்து வாடிக்கையாளர்களை விடுவிக்க வேண்டும் என்கின்றனர் செவ்வாய்க்கிழமை வரிசையில் நின்று ஓய்ந்துபோன வாடிக்கையாளர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com