கிராமப்புறங்களில் ஆலோசகர்கள் நியமிக்கப்படுவார்களா?

திருச்சி, ஜன. 1:  ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் பயன்பெறும் வகையில், வளர் இளம் பருவத்தினருக்கான குடும்ப நல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மாணவ, மாணவிகள் மத்
Updated on
2 min read

திருச்சி, ஜன. 1:  ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் பயன்பெறும் வகையில், வளர் இளம் பருவத்தினருக்கான குடும்ப நல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மாணவ, மாணவிகள் மத்தியில் எழுந்துள்ளது.

  வளர் இளம் பருவத்தில் உள்ளோருக்கு தங்களைவிட வயதில் மூத்தவர்கள் கூறும் அறிவுரைகள் எல்லாம் எவ்விதத்திலும் எடுபடாது. அறிவுரை கூறுவோரைக் கண்டால் இந்த வயதினருக்கு அறவே பிடிக்காது. தாங்கள் சொல்வது, செய்வதுதான் சரியானது என்ற எண்ணம் இவர்கள் மனதில் மேலோங்கி நிற்கும்.

  வளர் இளம் பருவத்தினருக்கு எழும் பிரச்னைகளை பிறரிடம் சொல்வதற்குத் தயக்கம், கூச்ச மனோபாவம் உடைய குழந்தைகள், பெற்றோரின் அரவணைப்புக்காக ஏங்கும் குழந்தைகள் என வளர் இளம் பருவத்தில் உள்ளோருக்கு பலவித பிரச்னைகள் தொடர்ந்து இருந்து வருகின்றன.

  இந்த நிலையில், மத்திய சமூக நல வாரியத்தின் நிதியுதவியுடன், தமிழக அரசு மாவட்டந்தோறும் வளர் இளம் பருவத்தினருக்கான ஆலோசனை மையங்களை ஏற்படுத்தி, ஒவ்வொரு மாவட்டத்திலும் தன்னார்வ அமைப்பைத் தேர்ந்தெடுத்து, அதன் கீழ் அந்த மையங்களை நடத்தி வருகின்றன.

  அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் டவுன்ஹால் அரசு மேல்நிலைப் பள்ளி, சையது முர்துஷா அரசு மேல்நிலைப் பள்ளி, பெரியமிளகுப்பாறை அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி, தில்லைநகர் கி.ஆ.பெ. விசுவநாதம் மேல்நிலைப் பள்ளி, உறையூர் எஸ்.எம். மேல்நிலைப் பள்ளி, மேலப்புதூர் ஆர்.சி. பள்ளி ஆகிய 6 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், திருச்சி பெற்றோர் அறக்கட்டளையில் (பேரண்ட்ஸ் டிரஸ்ட்)  இந்த மையம் ஏற்படுத்தப்பட்டது.

  இதன் ஒரு கட்டமாக, குறிப்பிட்ட பள்ளிகளில் ஆலோசனைப் பெட்டி வைக்கப்பட்டு, ஆலோசனை பெற விரும்பும் மாணவர்கள் தங்களது பிரச்னைகள் என்ன என்பதை பெட்டியில் எழுதிப் போடலாம். அல்லது பெற்றோர் அறக்கட்டளையைத் தொடர்பு கொண்டால் அங்குள்ள ஆலோசகர் மூலம் அவர்களுக்கு ஆற்றுப்படுத்தும் கருத்துகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

  பெற்றோர் அறக்கட்டளையில் 2 ஆலோசகர்களும் எல்லாப் பள்ளிகளுக்கும் சென்று, ஆலோசனை வழங்க வேண்டிய மாணவரையோ அல்லது மாணவியையோ தனியே அழைத்து, அவர்களிடம் உள்ள பிரச்னைகள் என்ன என்பதைக் கண்டறிந்து, தேவையான ஆலோசனைகளை வழங்கி அவர்களுக்கு ஊக்கமளிக்கும் கருத்துகளை வழங்குவர்.

  அந்த வகையில், 2008, ஜூன் மாதம் தொடங்கிய இத்திட்டத்தில் 2009, டிசம்பர் மாதம் வரை 360 மாணவ, மாணவிகள் பயன்பெற்றுள்ளனர்.

  இதில் தாய் } தந்தை சண்டையால் பாசத்துக்காக ஏங்கும் குழந்தைகள், கற்றல் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள், ஒரு குழந்தையிடம் பாசம் காட்டி மற்றொரு குழந்தையைக் கவனிக்காமல் இருப்பதால் தாழ்வுநிலையால் அவதிப்படும் குழந்தைகள், படிக்கிற வயதில் காதல்வயப்பட்டு அவதிப்பட்ட மாணவர்கள் அல்லது மாணவிகள் எனப் பலர் ஆலோசனை மையத்தை தொடர்பு கொண்டு, உரிய முறையில் ஆலோசனைகளைப் பெற்று தங்களை நிவர்த்தி செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

  குறிப்பிட்ட பள்ளியொன்றில் படித்து வந்த மாணவர் ஒருவர், பள்ளியில் சக மாணவர்களிடம் பேசாமலேயே இருந்து வந்துள்ளார். கோபம் வந்தால் தன்னைத்தானே கம்பியால் குத்திக் கொள்ளும் அந்த மாணவரை தனியே விசாரித்தனர். சிறு வயதில் தன்னுடைய தாயை ஒருவர் திருமணம் செய்து பின்னர் கைவிட்டுச் சென்றதாகவும், அதன் பின்னர் பாட்டியின் பராமரிப்பிலேயே அந்த மாணவர் இருந்து வந்ததாகவும், மற்ற மாணவர்கள் எல்லாம் பெற்றோருடன் கூடி, மகிழ்வதைக் கண்ட அந்த மாணவருக்கு தனது பெற்றோரின் ஞாபகம் வந்தால் தன்னைத்தானே கம்பியால் குத்திக் கொள்வதாகவும் கூறினாராம்.

  இதைத் தொடர்ந்து, அந்த மாணணவரை அழைத்து உரிய முறையில் விசாரித்து, அவருக்குத் தேவையான மனநல ஆலோசனையை வழங்கினோம். இப்போது அந்த மாணவர் படிப்பில் சிறந்து விளங்கி வருகிறார் என்றார் பெற்றோர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் வழக்குரைஞர் ஜயந்திராணி.

  நகரத்தில் உள்ள பள்ளிகளுக்கு இந்த மையம் எவ்வளவு தேவையோ அதைவிட இரண்டு மடங்கு ஊரகப் பகுதிகளைச் சேர்ந்தோருக்கும் தேவை. எனவே, வளர் இளம் பருவத்தினருக்கான ஆலோசனைகளை வழங்கும் பள்ளிகளின் பட்டியலில் ஊரகப் பகுதிகளையும் சேர்க்க வேண்டும்.

  ஏற்கெனவே ஊரகப் பகுதிகளைச் சேர்ந்தோருக்கு உரிய பயிற்சியை அளித்து வருகிறோம். மாநகரில் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்தப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு உரிய நேரத்தில், உரிய முறையில் ஆலோசனைகளை வழங்க வேண்டியது அரசின் கடமை என்றார் ஜயந்திராணி.

  மாநகரப் பகுதிகளில் தொடங்கப்பட்டு மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள இத் திட்டம் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த பள்ளிகளிலும் அமல்படுத்த வேண்டும். அதற்குத் தேவையான ஆலோசகர்களையும் அதிகளவில் நியமிக்க வேண்டும் எனக் கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com