திருச்சி, ஜன. 8: தமிழகம் முழுவதும் ஜன. 21 முதல் கள் விற்பனையைத் தீவிரப்படுத்தும் பணி தொடங்க தமிழ்நாடு கள் இயக்கம் முடிவு செய்துள்ளது.
இந்த இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இயக்கக் கள ஒருங்கிணைப்பாளர் செ. நல்லசாமி கூறியது:
"தமிழகத்தில் கள் இறக்குவதற்கான உரிமையை மீட்கும் வகையில் ஜன. 21 ஆம் தேதி முதல் கள் இறக்கி விற்பதைத் தீவிரப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடக்கமாக, ஈரோடு மாவட்டம், அரச்சலூரில் ஜன. 21 பகல் 11 மணிக்கு கள் இறக்கி சந்தைப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்துக்கு பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
"சுவை நீர்' விளக்கம் தேவை:
ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ள சுவை நீர் என்பது என்ன? என பலருக்கும் புரியவில்லை. சுவை நீர் எனச் சொல்லப்பட்டிருப்பது புளிக்காத கள் என்பவர்களும், அதை மறுப்பவர்களும் இருக்கின்றனர்.
எனவே, சுவை நீர் என ஆளுநர் உரையில் குறிப்பிட்டிருப்பது கள்ளைக் குறிக்குமா? அல்லது பதப்படுத்தப்பட்ட பதநீரைக் குறிக்குமா? ஆளுநர் உரை தயாரித்த ஆட்சியாளர்கள் இதற்குப் பொருள் அளிக்க வேண்டும்' என்றார் நல்லசாமி.
முன்னதாக, நடைபெற்ற கூட்டத்துக்கு தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் கே. ஜகதீசன் தலைமை வகித்தார்.
கள் இயக்க அமைப்பாளர் இல. கதிரேசன், கீழ் பவானி பாசன விவசாயிகள் சங்கச் செயலர் இரா. தங்கராசு, கொங்கு வேளாளர் பேரவை மாவட்டத் தலைவர் புலவர் ப. சின்னசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.