தஞ்சாவூர், ஆக. 7: அரசு அலுவலகங்களில் இரவுநேர கண்காணிப்பு அவசியம் என்றார் மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன்.
தஞ்சாவூரிலுள்ள பனகல் கட்டடத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கட்டடத்தில் அண்மையில் இரவில் தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அரசு அலுவலகங்களில் தீத்தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, வருவாய்த் துறை, கல்வித் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ஆட்சியர் பேசும்போது, மாவட்ட ஆட்சியரகத்திற்கு உட்பட்டு வெளியில் இருக்கும் அரசு அலுவலகங்களிலுள்ள இரவுக் காவலர்கள் கட்டாயமாக விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும். அதேபோல, அரசு அலுவலகங்களில் உபயோகமற்ற பழைய மரச்சாமான்கள், காலம்கடந்த உபயோகமற்ற காகிதங்களை அப்புறப்படுத்த வேண்டும். மேலும், முக்கிய அலுவலகங்கள் இருக்கும் இடங்களில் காவல் துறை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சீ. சுரேஷ்குமார், முதன்மைக் கல்வி அலுவலர் சு. மதி, பேரூராட்சிகள் உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன், தீயணைப்புத் துறை உதவிக் கோட்ட அலுவலர் மகாலிங்கமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








