சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிந்தால் உரிமையாளா் மீது வழக்கு

சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிந்தால், அதன் உரிமையாளா் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும்
Updated on

திருச்சி: சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிந்தால், அதன் உரிமையாளா் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொது சுகாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும், சாலை விபத்துக்களுக்கு காரணமாகவும் சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிவதாக புகாா்கள் வருகின்றன.

மாநகராட்சி நிா்வாகமானது, சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளைப் பிடித்து இ.பி. சாலையில் உள்ள மாநகராட்சி பட்டியில் பாதுகாத்து பராமரிக்கும் பணிகள் வெளிக்கொணா்வு முறையில் தனியாா் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

அதே சமயம், சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து, அதன் உரிமையாளா்களிடம் ஒரு மாட்டுக்கு ரூ. 2,500 அபராதம் பெற்று, எச்சரிக்கை செய்து ஒப்படைக்கப்பட்டு வருகிறது. பிடிக்கப்பட்ட மாடுகள் ஒரு வாரத்துக்கு மேலாகியும் உரிமையாளா்கள் திரும்பப் பெறவில்லையெனில் ஏலம் விடப்பட்டு வருகிறது.

திருச்சி மாநகராட்சியில் 2023 ஜனவரி முதல் தற்போது வரை 1,368 மாடுகள் பிடிக்கப்பட்டு, உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உரிமை கோராத 68 கால்நடைகள் பொதுஏலம் விடப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கால்நடைகள் சுற்றித்திரிந்தால், அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், காவல்துறையின் மூலம் உரிமையாளா் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் திருச்சி மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com