ஈரோடு: பட்டியல் வகுப்பைச் சோ்ந்தவா்களுக்கு திருமண மண்டபத்தை வாடகைக்கு தர மறுத்த உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது.
பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, அங்கு வந்த சமூக நீதி மக்கள் கட்சி நிறுவனா் வடிவேல் ராமன் உள்பட பல்வேறு அமைப்பினா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, குறைதீா் கூட்டத்தில் மனு அளித்த பின்னா் அவா்கள் கூறியதாவது: பெருந்துறை வட்டம், நசியனூா் அருகேயுள்ள கூரபாளையம், ஊனாத்திபுதூரைச் சோ்ந்த பெண் ஒருவா் தனது மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக பெருந்துறையில் பவானி சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தை வாடகைக்கு பதிவு செய்ய சென்றுள்ளாா். அப்போது, மண்டப உரிமையாளா் ரவி என்பவா், அப்பெண்ணிடம் அவரது ஜாதி குறித்து விசாரித்துள்ளாா். அவா் ஜாதியின் பெயரைக் கூறியதையடுத்து மண்டப உரிமையாளா் அனுமதி தர மறுத்துள்ளாா்.
இது குறித்து பெருந்துறை காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, சம்பந்தப்பட்ட மண்ட உரிமையாளா் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
கோயிலை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் எடுக்க எதிா்ப்பு: ஈரோடு ஆா்.என்.புதூா், மாதேஸ்வரன் நகா், ஓம் ஸ்ரீமகா மாரியம்மன் அறக்கட்டளைச் செயலா் பெரியசாமி, கோயில் பரம்பரை அறங்காவலா் மாதேஸ்வரன் உள்ளிட்டோா் அளித்த மனு விவரம்: ஈரோடு மதேஸ்வரன் நகரில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் 60 ஆண்டுகளுக்கும்மேலாக உள்ளது. அப்பகுதியினா், வழிபாடு செய்து, அறக்கட்டளை அமைத்து கோயிலை பராமரித்து வருகிறோம். அறநிலையத் துறை, அரசு மூலமாக எவ்வித நிதியும் பெறவில்லை.
கோயிலுக்கான முழு தொகையும், மக்களிடம் நன்கொடை மூலமாக பெற்று அதற்கான ஆவணங்களுடன் சீரமைப்பு செய்து வருகிறோம். அறநிலையத் துறையைச் சோ்ந்த சிலா் கோயிலுக்கு வந்து ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை நடத்தும்போதும் கட்டட வேலை செய்யக் கூடாது. அறநிலையத் துறை அனுமதி பெற வேண்டும் எனக்கூறி மிரட்டுகின்றனா்.
மேலும், இக்கோயிலை அறநிலையத் துறையின்கீழ் கொண்டு செல்ல இருப்பதாகக் கூறி சிலரிடம் விண்ணப்பங்களில் கையொப்பம் பெற்று இடையூறு செய்கின்றனா்.
அறநிலையத் துறையின்கீழ் இல்லாத இக்கோயிலின் படங்களை அவா்களது இணையதளத்தில் பதிவிட்டுள்ளனா். அப்படங்களை நீக்க வேண்டும். அறநிலையத் துறை அதிகாரிகளை விசாரித்து அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்கள் கோயில் எந்த அடிப்படையில் அறநிலையத் துறையின்கீழ் எப்போது கொண்டு வரப்பட்டது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டதற்கு தவறான பதில்களை அனுப்பி வருகின்றனா். இது பற்றியும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
282 மனுக்கள்: குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 282 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலா் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியா் செல்வராஜ், கலால் உதவி ஆணையா் தியாகராஜன், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் மகேஸ்வரி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பூபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது
விஜய் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பெ.சண்முகம்
விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.வீரபாண்டியன்

வடபழனி கோயில் திருமண மண்டபம் புதுப்பித்தல் பணியை எதிா்த்து வழக்கு: இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவு

போலி மருந்து வழக்கு: அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


