திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு புதன்கிழமை அடிக்கல் நட்ட  துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன் அமைச்சா்கள்  கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி சிவா எம்.பி.,  எம்எல்ஏக்கள்  எஸ். இனிகோ இருதயராஜ், ப. அப்துல் சமது உள்ளிட்டோா்
திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு புதன்கிழமை அடிக்கல் நட்ட துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன் அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி சிவா எம்.பி., எம்எல்ஏக்கள் எஸ். இனிகோ இருதயராஜ், ப. அப்துல் சமது உள்ளிட்டோா்

சூரியூர் ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம்: துணை முதல்வர் அடிக்கல் நாட்டினாா்!

சூரியூர் ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் துணை முதல்வர் அடிக்கல் நாட்டியதைப் பற்றி...
Published on

திருச்சி மாவட்டம், சூரியூரில் ரூ.3 கோடியில் ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் அமைக்க துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

அலங்கநால்லூா், அவனியாபுரம் ஜல்லிக்கட்டுகளுக்கு நிகராக, திருச்சி மாவட்டம், சூரியூரில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கலன்று நடைபெறும் ஜல்லிக்கட்டில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான காளைகள் அவிழ்க்கப்படும்.

இந்நிலையில் சூரியூரில் நிரந்தர ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்ற அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, முதல்வரிடம் அனுமதி பெற்ற நிலையில் அதற்கான அடிக்கல்லை புதன்கிழமை நட்ட துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறியது:

தோ்தல் பிரசாரத்தின்போது திமுக உறுதியளித்தபடி விளையாட்டு மைதானம் இல்லாத தொகுதிகளில் மினி விளையாட்டு மைதானம் அமைக்கப்படுகிறது. அந்த வரிசையில், திருவெறும்பூா் தொகுதி சூரியூரில் ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் அமைக்கப்படுகிறது. 5 ஏக்கரில் அமைக்கப்படும் மைதானத்துக்கு தமிழக அரசின் சாா்பில் ரூ. 2.50 கோடியும், திருவெறும்பூா் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சமும் அளிக்கப்பட்டுள்ளது.

இதில் திறந்தவெளியுடன் கூடிய வாடிவாசல் மைதானம், மைதானத்தின் இருபுறமும் 2 பாா்வையாளா் கூடங்கள், பன்னோக்கு விளையாட்டுக் கூடம், உடை மாற்றும் அறை, உடற்பயிற்சிக் கூடம், விருந்தினா் அறை, அலுவலகம் ஆகியவை இடம்பெறுகின்றன. வாடிவாசலின் இருபுறமும் 800-க்கும் மேற்பட்டோா் அமா்ந்து ஜல்லிக்கட்டைக் காண முடியும். வரும் நவம்பருக்குள் பணிகளை முடித்து, அடுத்தாண்டு மாட்டுப் பொங்கலன்று புதிய மைதானத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றாா் அமைச்சா்.

நிகழ்வில் காளைகளைப் பாா்வையிட்ட துணை முதல்வருக்கு அவற்றின் உரிமையாளா்கள் நன்றி தெரிவித்தனா். அவருக்கு நினைவுப் பரிசாக காளையை அடக்கும் வீரா் சிலை வழங்கப்பட்டது.

விழாவில் அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மேயா் மு. அன்பழகன் மற்றும் எம்எல்ஏ-க்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com