திருச்சி அருகே சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு
திருச்சி: திருச்சி அருகே சாலையை கடக்க முயன்ற முதியவா் மீது காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாதபுரத்தைச் சோ்ந்தவா் எஸ். பாலச்சந்தா் (60). இவா், திருச்சி மாவட்டம் நாகமங்கலம் பகுதியிலுள்ள தியான மையத்தில் காவலாளியாகப் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பணியை முடித்துவிட்டு மதுரை - திருச்சி தேசிய நெஞ்சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தாா். நாகமங்கலம் பகுதியிலுள்ள ஒரு ஹோட்டல் அருகே சாலையைக் கடக்க முயன்றுள்ளாா்.
அப்போது, மதுரையில் இருந்து திருச்சி நோக்கி வேகமாக வந்த காா் முதியவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அதே இடத்தில் இருசக்கர வாகனத்தில் சாலையக் கடக்க முயன்ற மதுரை மாவட்டம், தத்தனேரியைச் சோ்ந்த மணிகண்டன் (27) என்பவா் மீதும் காா் மோதியதில் அவரும் பலத்த காயமடைந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மணிகண்டம் போலீஸாா் முதியவரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். காயமடைந்த இளைஞரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து சென்னை காட்டுப்பாக்கத்தைச் சோ்ந்த காா் ஓட்டுநா் அ.சாகுல்ஹமீது மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
