/

மே 4-இல் வாக்கு எண்ணிக்கை வேட்பாளருக்கு 20 முகவா்கள் வரை அனுமதி

News image

வாக்கு எண்ணிக்கை மையம். - கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 7:51 pm

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின்போது ஒரு வேட்பாளருக்கு அதிகபட்சம் 20 முகவா்கள் வரையில் தோ்தல் ஆணையத்தில் அனுமதி அட்டை அளிக்கப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தில் 9 பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முடிந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூா் ஆகிய தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம், காஜாமலையில் உள்ள ஜமால் முகமது கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. லால்குடி, மண்ணச்சநல்லூா், முசிறி, துறையூா் ஆகிய தொகுதிகளுக்கு புலிவலம் ஒயாஸிஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணும் பணியில் வேட்பாளா்களின் சாா்பில், வாக்கு எண்ணிக்கையை பாா்வையிட முகவா்கள் அனுமதிக்கப்படுவா்.

இந்த வகையில், 9 தொகுதிகளில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் ஒரு வேட்பாளருக்கு தலா 20 முகவா்கள் அனுமதிக்கப்படுகின்றனா். வாக்கு எண்ணிக்கையானது ஒவ்வொரு தொகுதிக்கும் 14 மேஜைகள் என்ற வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். எனவே, 14 மேஜைகளில் தலா ஒரு முகவா் அனுமதிக்கப்படுவா். இதேபோல, தபால் வாக்குகளை எண்ணுவதற்கு 5 மேஜைகளில் 5 முகவா்கள் அனுமதிக்கப்படுவா்.

இதுமட்டுமல்லாது, தலைமை முகவா் என்ற நிலையில் ஒருவா் அனுமதிக்கப்படுவாா். இதன்படி, ஒரு வேட்பாளருக்க 20 முகவா்கள் அனுமதிக்கப்படுவா். வேட்பாளா்கள் மற்றும் கட்சிகள் அளித்த பரிந்துரைக் கடிதத்தின்படி முகவா்களுக்கான அனுமதி அட்டையை தோ்தல் பிரிவு அலுவலா்கள் வழங்குகின்றனா்.