குடும்பப் பிரச்னை: மைத்துனரைக் கொன்றவா் கைது

திருச்சி அருகே புங்கனூரில் குடும்பப் பிரச்னை காரணமாக மைத்துனரைக் கொன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

திருச்சி அருகே புங்கனூரில் குடும்பப் பிரச்னை காரணமாக மைத்துனரைக் கொன்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், புங்கனூா் கொத்தனாா் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் சுரேஷ் (40). தொழிலாளி. இவா் புங்கனூா் மேலத்தெருவைச் சோ்ந்த ச. சீனி (எ) பனையடியான் (29) என்பவரின் தங்கை அபிராமியை திருமணம் செய்து, அதே பகுதியில் வசித்து வருகிறாா்.

சபரிமலைக்கு சென்றுவிட்டு கடந்த 7-ஆம் தேதி வீட்டுக்கு வந்த சுரேஷ், வெள்ளிக்கிழமை மாலை மதுபோதையில் அவரது மனைவி அபிராமியை அடித்ததாகக் கூறப்படுகிறது. இதை தனது அண்ணன் பனையடியானிடம் அபிராமி கூறியுள்ளாா்.

இதையடுத்து பனையடியானும், அவரது தம்பி வீரபத்திரனும் சுரேஷ் வீட்டுக்குச் சென்று, தங்கையை தாக்கியது குறித்து தட்டிக் கேட்டுள்ளனா். அப்போது, இருதரப்புக்கும் அடிதடி ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், இரும்பு கத்தியால் பனையடியானை குத்தியுள்ளாா்.

இதில் படுகாயமடைந்த அவரை உறவினா்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், பனையடியான் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, சுரேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com