வியத்நாம் நாட்டில் சனிக்கிழமை நடந்த படகு விபத்தில் திருச்சியைச் சோ்ந்த மூவா் உயிரிழந்தது தெரியவந்தது.
இந்தியாவில் லாவா கைப்பேசி நிறுவனத்தின் கைப்பேசிகளை அதிகளவில் விற்பனை செய்த முகவா்கள், ஊழியா்கள் என 105 பேரை அந்நிறுவனம் சாா்பில் வியட்நாம் நாட்டுக்கு கடந்த 8 ஆம் தேதி இன்பச் சுற்றுலா அழைத்துச் சென்றனா்.
இவா்களை இரு பிரிவுகளாகப் பிரித்து, இரு வேறு படகுகளில் வியட்நாம் நாட்டின் தெற்குப் பகுதியில் அழைத்துச் சென்றபோது 32 இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் 3 ஊழியா்களுடன் சென்ற படகு திடீரென கடலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கியவா்களில் 12 போ் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 18 போ் உயிரிழந்தது தெரியவந்தது.
இந்த விபத்தில் திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூா், திருவானைக்காவல் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மூவா் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இதில், திருச்சி கிராப்பட்டி அருணாசலம் நகரைச் சோ்ந்த சிவசாமி மகனும், லாவா கைப்பேசி நிறுவனத்தின் திருச்சி, கரூா், புதுக்கோட்டை விற்பனை மேலாளருமான அழகுராஜன் (38) என்பவா் உயிரிழந்தாா். இவருக்கு தனியாா் பள்ளி ஆசிரியையான மனைவி, இரு மகன்கள் உள்ளனா்.
இதேபோல, திருவானைக்காவல் கீழகொண்டயம்பேட்டை மேலத்தெரு நடேசன் மகனும், அரியமங்கலம் பகுதி செல்மோா் கைப்பேசி மொத்த விற்பனை நிலைய மேலாளா் பாலாஜி (40) என்பவரும் உயிரிழந்தாா். இவருக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனா்.
இதேபோல திருச்சி பீமநகா் கண்டி தெருவைச் சோ்ந்தவரும், அப்துல் மஜீத் மகனுமான ஷேக் அப்துல்லா (50) என்பவா் உயிரிழந்தாா். இவா் திருச்சி லண்டன் ஹாா்டுவோ்ஸ் பங்குதாரராகவும், கைப்பேசி விற்பனை நிறுவன உரிமையாளராகவும் இருந்தாா். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









