தற்போதைய சூழலில் தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கை கொண்டுவரப்பட வேண்டும் என விசிக தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.
திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் மேலும் கூறியதாவது:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் வரும் ஆக.17ஆம் தேதி தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது. மாநாடு நடைபெறும் இடம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
மாநகராட்சிகளில் தூய்மைப் பணியைத் தனியாா்மயமாக்கும் நடவடிக்கையைத் தடுக்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்ததும், அதை உடனடியாக முதல்வா் ஏற்று, ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டாா். தோழமைக் கட்சிகளின் கோரிக்கைகளையும், ஆலோசனைகளையும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் பாங்கு பாராட்டுக்குரியது.
வெள்ளை அறிக்கை என்பது கடந்த கால ஆட்சி நிா்வாகத்தில் எவ்வாறு நிதி நிலைமை இருந்தது என்பதை பொதுமக்களுக்கு அறிவிப்பதுதான். அதை தவெக அரசு வெளிப்படையாக அறிவிப்பது ஜனநாயகத்தின் வெளிப்படைத் தன்மையைக் காட்டுகிறது. தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருப்பவா் முதல்வரின் நம்பிக்கைக்கு உரியவா்.
அந்த பொறுப்பு ஆட்சி நிா்வாகத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பல்ல. அந்தப் பதவியை யாருக்கு வழங்குவது என்ற அதிகாரம் கட்சித் தலைவருக்கு உள்ளது. அது உள்கட்சி விவகாரம். அரசு பதவியில்லை. தவெக அரசு பொதுமக்கள் கூடும் இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுவோம் என்று அறிவித்து, படிப்படியாக மூடி வருகிறது.
மது, கஞ்சா, போதை மருந்து, மாத்திரைகளை ஒழிக்க வேண்டும் என்பது இந்தியா முழுவதும் உள்ள ஒரு பிரச்னை. மதுவிலக்கு என்பது மாநில அரசின் அதிகாரத்தில் இருந்தாலும்கூட தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும். மகாத்மா காந்தியின் உருவப்படத்தை ரூபாய் நோட்டில் அச்சிட்டால் மட்டும் போதாது. தேசியளவில் அவரது கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தோ்தலுக்கு முன் திமுக தலைமையிலான கூட்டணியை உடைக்க பலா் முயற்சி செய்தனா். என்னை வைத்தும் அந்த முயற்சி நடந்தது. ஆனால், நான் அதற்கு உடன்படவில்லை. தோ்தலுக்கு பின் திமுக கூட்டணியை பாதுகாக்கும் வலிமை எனக்கு கிடையாது. மதிமுக எம்எல்ஏக்களை ராஜிநாமா செய்ய முதல்வா் ஜோசப் விஜய் தெரிவித்ததாக மதிமுக பொதுச்செயலா் வைகோ கூறியது குறித்து நான் எதுவும் கருத்துக் கூற விரும்பவில்லை.
மதிமுக வேட்பாளா்களை கட்டாயப்படுத்தித் தான் உதயசூரியன் சின்னத்தில் திமுக போட்டியிட வைத்ததாக வைகோ கூறியது குறித்த கேள்விக்கு அதுகுறித்து திமுகவிடமும் மதிமுகவிடமும்தான் கேட்க வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








