/

மன உளைச்சலை ஏற்படுத்தும் நீட்: தற்கொலை செய்துகொண்ட மாணவருக்கு திருமாவளவன் அஞ்சலி

மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்யும் அளவுக்கு நீட் தேர்வு மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன்.

News image
மாணவர் விக்னேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன்.
Updated On :10 செப்டம்பர் 2020, 11:52 am

DIN

மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்யும் அளவுக்கு நீட் தேர்வு மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன்.

அரியலூர் மாவட்டம் எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் விக்னேஷ்(19), நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில், மன அழுத்தம் காரணமாக புதன்கிழமை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அவரது உடல் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிந்த பின்பு விக்னேஷ் உடலுக்கு தொல்.திருமாவளவன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த தொல்.திருமாவளவன், மருத்துவராக வேண்டும் என்கிற ஆசையில் தொடர்ந்து நீட் தேர்வு எழுதி மருத்துவம் படிப்பதற்கு இயலாத நிலையில் இந்த ஆண்டு எழுதுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். 

ஆனால் இந்த ஆண்டும் மருத்துவ கனவை நனவாக்க முடியாது என்கிற மன அழுத்தம் ஏற்பட்டு அவர் தன்னைத் தானே மாய்த்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்யும் அளவிற்கு நீட் தேர்வு மன உளைச்சலை ஏற்படுத்தி வருக்கிறது என்பதை நாட்டை ஆள்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீட் தேர்வு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியா முழுவதும் கூடாது என்பதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைபாடு. இந்த ஆண்டுக்கு மட்டும் வேண்டாம் என்று இல்லை இனி எப்போதும் வேண்டாம் என்பதுதான் விடுதலை சிறுத்தை கட்சியின் கோரிக்கை. அனிதாவை தொடர்ந்து பல மாணவச் செல்வங்களை இழக்கும் நிலை நமக்கு ஏற்பட்டிருக்கிறது. 

இதற்கு முன்பாக ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலை தொடர்வது மிகுந்த வேதனை அளிக்கிறது. தமிழக அரசு நீட் தேர்வு வேண்டாம் என்று நிலைப்பாட்டை எடுத்தாலும் கூட அதை தவிர்க்க முடியாத ஒரு இக்கட்டில் தமிழகம் உள்ளதாக முதல்வரே கூறியிருக்கிறார். ஏழு மாநில முதலமைச்சர்கள் நீட் தேர்வு எதிராக வழக்கு கொடுத்தார்கள். நீட் தேர்வு வேண்டாம் என்று தமிழக அரசு அவ்வாறு வழக்கு கொடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார். விக்னேஷ் உயிர் இழப்பால் அவரது குடும்பம் எந்த அளவுக்கு துக்கத்தில், துயரத்தில் வீழ்ந்து கிடக்கிறது என்பதை தமிழக அரசும், மத்திய அரசும் புரிந்து கொள்ள வேண்டும். நீட் தேர்வு இல்லை என்றால் விக்னேஷ் தனது பிளஸ்2 வகுப்பு மதிப்பெண்களை வைத்து மருத்துவர் கல்வி பெற்று இருப்பார்.

விக்னேஷை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விக்னேஷ் குடும்பத்துக்கு தமிழக அரசு மற்றும் மத்திய அரசும் இணைந்து ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார். தொடர்ந்து, அவரது குடும்பத்தினரிடம் ரூ.25,000 வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.