ஜெயங்கொண்டம் நகராட்சியுடன் பிராஞ்சேரியை இணைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் மனு
ஜெயங்கொண்டம் நகராட்சியுடன் பிராஞ்சேரி கிராமத்தை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் வருவாய் வட்டத்தில், 2-ஆவது நாளாக வியாழக்கிழமை உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற்றது.
உடையாா்பாளையம் வருவாய் வட்டாட்சியரகத்தில் வியாழக்கிழமை காலை ஆய்வுப் பணிகளை நிறைவு செய்த ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம், பிராஞ்சேரி கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஜெயங்கொண்டம் நகராட்சியுடன் எங்கள் கிராமத்தை இணைக்க அரசு மக்களிடம் கருத்துக்கேட்டு கிராமசபைக் கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது. எங்கள் கிராமத்தில் அனைவரும் விவசாய கூலித் தொழிலாளா்களாக உள்ளோம். எங்கள் கிராமம் ஜெயங்கொண்டம் நகராட்சியுடன் இணைக்கப்பட்டால், 100 நாள் வேலை, மத்திய, மாநில அரசு வழங்கும் வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் எங்களுக்கு கிடைக்காமல் போகும்.
எனவே, ஜெயங்கொண்டம் நகராட்சியுடன் பிராஞ்சேரி கிராமத்தை இணைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

