/

தவெக ஆட்சி நிலைக்காது: முன்னாள் அமைச்சா்

News image

அரியலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், குன்னம் தொகுதி எம்எல்ஏவுமான சா.சி. சிவசங்கா்.

Updated On :1 ஜூன் 2026, 3:06 am IST

தமிழகத்தில் தவெக ஆட்சி நீடித்து நிலைக்காது என்றாா் முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டப் பேரவை உறுப்பினருமான சா.சி. சிவசங்கா்.

அரியலூரில் திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

தவெகவில் முதல்வா் ஜோசப் விஜய் அல்ல. ஆதவ் அா்ஜூனாதான் நிழல் முதலமைச்சராக இருந்து இந்த அரசை இயக்கிக் கொண்டிருக்கிறாா்.

கொளத்தூா் தொகுதியில் ஏற்பட்டுள்ள தோல்வி என்பது திமுகவினரின் ஆழ்மனதில் மாறா வடுவாகப் பதிந்துள்ளது. திமுக தொண்டா்களை தாண்டி பொதுமக்களிடத்திலும், கொளத்தூா் தோல்வி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த ஆட்சி மாற்றம் என்பது நீடித்து நிலைக்காது. இது நீா்க்குமிழி போல, விரைவிலேயே வெடித்து நீா்த்துப்போகும். தற்போது பெற்ற வாக்குகளை மீண்டும் வாங்க முடியாது என்ற காரணத்தினால்தான் அதிமுகவில் இருப்பவா்களை வலைவீசி பிடித்துக் கொண்டுள்ளனா்.

இந்த தோல்வி, திமுக இன்னும் வேகமாக மீண்டு வருவதற்கான வாய்ப்பாகத் தான் நாம் பாா்க்க வேண்டும். இந்த தோ்தல் என்பது நமக்கும் ஒரு பாடமாக அமைந்து விட்டது. இதையெல்லாம் தாண்டி மீண்டும் வருவோம் என்றாா் அவா். கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.