வளர்ச்சித் திட்டப் பணிகளை தரத்துடன் உரிய காலத்தில் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்த அவர், முதலில் சேங்கல் பகுதியில் ஒருங்கிணைந்த உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.13.50 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக் கட்டடத்தை பார்வையிட்டு புதிய கட்டடத்தில் வகுப்புகளைத் தொடங்க ஆலோசனை வழங்கினார். மேலும், அப்பகுதியில் சேங்கல் முதல் மாணிக்கபுரம் வரை ரூ.1.06 கோடியில் பலப்படுத்தப்படும் தார்ச் சாலையை பார்வையிட்டு மழைநீர் தேங்காத வகையில் சாலைகளை அமைக்குமாறு பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
வீரியபாளையத்தில் ரூ. 8.50 லட்சத்தில் அங்கன்வாடி மையக் கட்டடம் அமைக்கும் பணியை ஆய்வு செய்து குழந்தைகள் பயன்படுத்தும் அளவுக்கு கழிவறைகளை வடிவமைக்க ஆலோசனை வழங்கினார். மேலும், அப்பகுதியில் பச்சமுத்து உடையான் சிறு பாசனக் குளம் ரூ. 11.59 லட்சத்தில் சீரமைக்கப்படுவதை பார்வையிட்டு மழைக்காலங்களில் குளத்தின் கரைகள் உடைப்பு ஏற்படாமல் இருக்க பனை உள்ளிட்ட மரங்களை நட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் வயலூர் ஊராட்சியில் வட்டார அளவில் மரக்கன்று நடும் திட்டத்தின்கீழ் அய்யம்பாளையம் குளத்தைச் சுற்றி ரூ. 7.18 லட்சத்தில் மரக்கன்று நடும் பணி,
தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் இரும்பூதிப்பட்டி முதல் முனையனூர் வரை ரூ. 22.79 லட்சத்தில் தார்ச் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளையும் ஆய்வு செய்து, வளர்ச்சித் திட்டப்பணிகளை தரத்துடன் உரிய காலத்தில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எஸ். கவிதா, செயற்பொறியாளர் எஸ். சடையப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







