கரூா் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே தீக்காமயடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
சின்னதாராபுரம் அருகிலுள்ள தும்பிவாடியைச் சோ்ந்தவா் வெ.தவசிமணி (39). தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இதே பகுதியைச் சோ்ந்தவா் சு. ஜெயராஜ் (54).
கடந்த மாதம் 27-ஆம் தேதி ஜெயராஜ் வீட்டில் அசைவ உணவு சமைத்துக் கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த தவசிமணி, வீட்டில் சமையல் எரிவாயு உருளையில் கசிவு ஏற்படுவதாகக் கூறினாா்.
இந்நிலையில் சமையல் எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக அப்பகுதியிலிருந்த தவசிமணி, ஜெயராஜ் மீது தீப்பற்றியது. பலத்த காயமடைந்த இருவரும் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதைத் தொடா்ந்து தவசிமணி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். ஜெயராஜ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். புகாரின் அடிப்படையில், சின்னதாராபுரம் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.