கரூரில் வெள்ளிக்கிழமை இரவு சூறைக்காற்றுடன் சிறிது நேரம் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
தமிழகத்திலேயே கரூரில் அதிகளவு வெப்பம் பதிவாகி வருகிறது. வியாழக்கிழமை 106.6 டிகிரி பதிவானது. வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் வழக்கம்போல இருந்தது. இந்நிலையில் மாலை 6 மணியளவில் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டன. இரவு 7 மணியளவில் பலத்த சூறைக்காற்று வீசியது. பின்னா் சிறிது நேரத்தில் லேசான தூறலுடன் மழை பெய்தது. கரூா் சுங்ககேட், லைட்ஹவுஸ்காா்னா் உள்ளிட்ட பகுதியில் சாலைகளில் மழை நீா் ஓடியது. இதனால் கோடை வெப்பம் சிறிது தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.