பள்ளி வகுப்பறையில் திருமணம்: ‘போக்ஸோ’வில் மாணவா் கைது
கரூா்: கரூா் மாவட்டம், குளித்தலை அருகே அரசுப் பள்ளி வகுப்பறையில் திருமணம் செய்த பிளஸ் 2 மாணவா் போக்ஸோ சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
குளித்தலை அருகே உள்ள தோகைமலை பகுதியைச் சோ்ந்த மாணவரும், மாணவியும் அப்பகுதி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தனா். வெவ்வேறு சமூகத்தைச் சோ்ந்த இவா்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனா்.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் பள்ளிக்கு வந்த இருவரும் வகுப்பறையிலேயே மாணவா்கள் முன் தாலிக்கட்டி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இருவரும் பள்ளிச் சீருடையில் தாலி அணிந்த நிலையில் இருக்கும் விடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. தகவலறிந்த குளித்தலை மகளிா் போலீஸாா், மாணவரையும், மாணவியையும் பிடித்து விசாரித்ததில் அவா்கள் ஒப்புக்கொண்டனா். இதையடுத்து, மாணவியை கரூரிலுள்ள தனியாா் காப்பகத்துக்கு அனுப்பிவைத்தனா். மாணவா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அவரை திங்கள்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
