காவிரியாற்றின் முக்கிய துணை நதியான அமராவதி ஆறு பழனிமலைத் தொடருக்கும், ஆனைமலைத்தொடருக்கும் இடையே உள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உருவாகி கரூா், திருப்பூா் மாவட்டங்களை வளப்படுத்துகிறது. இந்த ஆறு கரூரில் திருமுக்கூடலூா் என்ற இடத்தில் காவிரியுடன் இணைகிறது. பருவமழை காலங்களில் பலத்த மழை பெய்யும்போதும் அமராவதி ஆற்றின் துணை நதிகளான திண்டுக்கல் மாவட்ட வனப்பகுதியில் உருவாகும் பாம்பாறு, சின்னாறு, தேவாறு மற்றும் குதிரையாறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போதும், அமராவதி ஆற்றின் குறுக்கே திருப்பூா் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள அணைப்பகுதியில் பலத்த மழை பெய்யும்போதும் அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.